×

ஜார்கண்டில் நேற்றிரவு பயங்கரம்; ரயில் தண்டவாளம் வெடிவைத்து தகர்ப்பு: நக்சல் கும்பலுக்கு தொடர்பா?

ராஞ்சி: ஜார்கண்டில் நேற்றிரவு ரயில் தண்டவாளம் வெடிவைத்து தகர்ப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கும் நிலையில், இந்த சம்பவத்தில் நக்சல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்கின்றனர். ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசா அடுத்த கோயில்கேரா-போசைட்டா ரயில் நிலையங்களுக்கு இடையே கரோ என்ற பாலம் உள்ளது. அந்தப் பாலத்தின் அருகே உள்ள ரயில் பாதையில் தண்டவாளத்தின் குறிப்பிட்ட பகுதியை மர்ம கும்பல் வெடிகுண்டு மூலம் தகர்த்தது. இதனால் ஹவுரா-மும்பை பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்றிரவு கரோ பாலத்தின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை வெடிவைத்து தகர்த்துள்ளனர். சரக்கு ரயில் சென்ற மற்றொரு ரயில் டிரைவர், வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட ரயில்பாதையின் அருகே பேனர்கள், போஸ்டர்கள் கிடந்ததை பார்த்து ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினோம். தண்டவாளத்தின் குறிப்பிட்ட பகுதியானது வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக அவ்வழியாக செல்ல திட்டமிட்டிருந்த ஷாலிமார்-குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் உடனடியாக கோயில்கேரா நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இன்று இடதுசாரி (மாவோயிஸ்ட்) அமைப்பு பாரத் பந்த் அறிவித்திருந்தது. அந்த நக்சல் கும்பல் தான், தண்டவாளத்தை வெடிவைத்திருக்கும். சம்பவ இடத்தில் இருந்து அவர்களின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை மீட்டுள்ளோம். தற்போது மீட்புப் பணிகள் தொடர்கிறது. பிற்பகலில் இருந்து இவ்வழியாக ரயில்கள் இயக்கப்படும். தண்டவாளத்தை வெடிவைத்து தகர்த்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனர்.

The post ஜார்கண்டில் நேற்றிரவு பயங்கரம்; ரயில் தண்டவாளம் வெடிவைத்து தகர்ப்பு: நக்சல் கும்பலுக்கு தொடர்பா? appeared first on Dinakaran.

Tags : Ranchi ,Jharkhand, Naxal ,Jharkhand ,Naxals ,Dinakaran ,
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை